Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
புதுச்சேரி: புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 30 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்கள் தவிர மாநில அரசின் பரிந்துரையின் பேரில் மத்திய அரசு 3 பேரை எம்.எல்.ஏ.க்களாக நியமிக்கலாம். இந்த நிலையில் புதுவை அரசின் பரிந்துரையின்றி பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக மத்திய அரசு நியமித்தது.
அவர்களுக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் பதவிப்பிரமாணம் செய்து வைக்காத நிலையில் கவர்னர் கிரண்பேடி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இவ்விவகாரம் சுப்ரீம் கோர்ட் வரை சென்றது. அப்போது, புதுச்சேரி பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேரை மத்திய அரசு நேரடியாக நியமித்தது செல்லும். நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் புதுச்சேரி அரசு தலையிட தேவையில்லை என சுப்ரீம் கோர்ட் கூறியது. இதையடுத்து இவ்விவகாரத்தில் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் புதுச்சேரி சட்டசபை பாஜக நியமன எம்.எல்.ஏ.வான சங்கர் (வயது 70) மாரடைப்பால் காலமானார். இவர் புதுச்சேரி மாநில பாஜக பொருளாளராக இருந்தவர். சங்கர் மறைவால் புதுச்சேரி சட்டசபையில் நியமன எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 3-லிருந்து 2ஆக குறைந்துள்ளது.